-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நேற்று 9 ம் தேதி (ஏப்ரல், 2026) அன்று நடைபெற்றன.
இதில், அசாம் மற்றும் புதுச்சேரியில் முந்தைய தேர்தல் வரலாற்றில் இருந்திராத அளவு அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாம் மாநிலத்தில் 85.38 விழுக்காடும், புதுச்சேரியில் 89.83 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. கேரளாவில் 78.03 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
30 சட்டமன்றத் தொகுதிகள், சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள புதுச்சேரி, ஏனாம், மாகே மற்றும் காரைக்கால் நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது ஊரகப்பகுதிகளிலேயே அதிகபட்சமாக 93 விழுக்காடுகள் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலைவிட சுமார் 6 விழுக்காடு வாக்குகள் கூடுதலாகப் பதிவானதற்குக் காரணம் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர் சில புதுச்சேரி பத்திரிகையாளர்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.
நாம் தமிழர் கட்சி கடந்த ஆறு தேர்தல்களாகப் போட்டியிட்டு வருகிறது. நடிகர் விஜயின் தாவெக முதன் முதலாக இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.
தவெக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது . இதில் தமிழ்நாட்டில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அங்கு தவெக போட்டியிடவில்லை. மீதமுள்ள 233 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
புதுச்சேரியின் புதிய வரவுகள்
30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியில் புதிய வரவாக மார்ட்டின் லாட்டரிஸ் ஜோ.சார்ல்ஸ் போட்டியிடுகிறார். அவர் கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக புதுச்சேரியில் அரசியல் பணிகளை ஆற்றி வருகிறார். மேலும், தவெகவும் போட்டியிடுகிறது.
இறுதிநாள் வரை பெரிய கட்சிகளின் கூட்டணி ஏதும் தவெகவுடன் சேராத நிலையில் நேருவின் நமது மக்கள் கழகம் கட்சி இறுதிநேரத்தில் கூட்டணி அமைத்த நிலையில் தவெக 30 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
பொதுவாகவே புதுச்சேரியில் கட்சியைவிட தனிமனித செல்வாக்கு பெற்றவர்களே தேர்தல்களில் வெற்றி பெறுவது வழக்கம். மேலும், வாக்குகளுக்குப் பணம் என்பதும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது.
இத்தகைய நிலையில், என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால் இந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.
அதேவேளையில், புதிதாக, ஜோ. சார்லஸ் சட்டமன்றத்திற்குத் தேர்வு ஆவார் என்றும் த.வெ.கவின் குறைந்தது இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் பல தரப்பினரிடம் நமது செய்தியாளர்கள் பேசிய வகையில் தெரிகிறது.
தவெக சார்பில் திருபுவனை தொகுதியில் போட்டியிட்ட சாய் சரவணன் இதற்கு முன்னதாக பாஜகவில் இருந்தவர். உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். பாஜகவில் தமக்குப் போட்டியிடத் தொகுதி தரப்படவில்லை என்பதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தவெகவில் இணைந்து போட்டியிட்டார்.
அதேபோல பாகூர் தொகுதியில் போட்டியிட்ட தனவேலு, முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்துவிட்டு பிறகு வெளியேறி தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தங்கள் சொந்த செல்வாக்கினால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக பத்திரிகை ஊடகவியலாளர்கள் கருதுகிறார்கள்.
அதேபோல, மணவெளி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராமுவும் அதிக வாக்குகள் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இவர்கள் தவிர, தவெக சார்பில் போட்டியிடும் உழவர்கரை சசிபாலன், லாஸ்பேட் சாமிநாதன், நேரு ஆகியோரும் அதிக வாக்குகள் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
புதுச்சேரியில் சராசரியாக தலா ஒரு வாக்காளருக்கு 4 ஆயிரத்து 500 முதல் 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை கணிசமான எண்ணிக்கையில் பணம் பட்டுவாடா ஆகியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. (பணம் பெறாதவர்களை இதில் நாம் சேர்க்கவில்லை)
பணம் விளையாடும் பணக்காரத் தேர்தல் களமாக இருப்பினும், இங்கும் வாக்குகளுக்குப் பணம் கொடுக்காமலேயே கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 3.5 விழுக்காடுகளும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 5 விழுக்காடு வாக்குகளும் பெற்றது நாம் தமிழர் கட்சி .
நாம் தமிழர் கட்சி
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் விண்மீன் கொள்கைப்பரப்பு செயலாளர்களை புதுச்சேரியில் ஒரு வார காலத்திற்குக் களம் இறக்கியிருந்தால் உறுதியாக வாக்கு விழுக்காட்டை அதிகரித்திருக்க முடியும் அல்லது ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி வாய்ப்பைத் தொட்டிருக்க முடியும் என்று பத்திரிகை ஊடகர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திட்டமிட்டு ஒன்றிண்டு நாட்கள் செலவிட்டு புதுச்சேரியில் வலம் வந்திருந்தால் அவ்வாறு பெற்றிருக்கும் கூடுதல் வாக்குகள் அக்கட்சிக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து களத்தில் மிகக் கடுமையாக பணியாற்றி, தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மிக ஆழமான அழுத்தமான செல்வாக்கை ஏற்படுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி பக்கமும் தமது கவனத்தை செலுத்தினால் பண பலத்தைக் கடந்து நேர்மையாளர்களின் வாக்குகளைப் பெற இயலும், நாம் தமிழர் கட்சிக்கான வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இரங்கசாமி, இரண்டு தேர்தல்களில் போட்டியிடும் நிலையில் ஒரு தொகுதிலிருந்து பதவி விலகல் செய்ய வேண்டியிருக்கும். அந்த இடைத்தேர்தலை நாம் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ய்பு உள்ள நிலையில் இதற்கேற்ப திட்டமிடுவார்கள் என்று நம்புவோம்.

