-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
ஈரான் மீதான போர் நீண்ட நாட்கள் நீடித்து ஒருவேளை கச்சா எண்ணெயும், எரிவாயுவும் தடைபட்டால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா ?!
எனினும் அத்தகைய சூழல் ஏற்படாமல் இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் போர் குறித்து அரசியல் ரீதியாகத்தான் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகு இஸ்ரேல், நரேந்திர மோடி, அமெரிக்கா, ஈரான், பெர்சியா, ஷியா, சுன்னி, ஜியோனிஸம், எப்ஸ்டீன் என்றுதான் வாத விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இந்தப் போர் நீடித்து மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற நிலை தொடர்ந்து நீடித்து, ஒருவேளை ஈரான் நாட்டின் வசமுள்ள “ஹோர்முஸ் நீரிணை” மூடப்பட்டால் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களால் சூடான தேநீர் தயாரிக்கக்கூட இயலாது. மேலும், சமையல் அடுப்புகள் எரிவாயு இல்லாமல் உறைந்துவிடும் அபாயம் உள்ளது.
காரணம், ஈராக், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா நாளொன்றுக்கு வாங்கும் 27லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுமந்து வரும் கப்பல்கள் ஈரானின் “ஹோர்முஸ் நீரிணை” வழியாகத்தான் வர இயலும்.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யாவிடமிருந்து நாம் வெறும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றைத் தரும் கச்சா எண்ணெயை மட்டும் வாங்கவில்லை, சமையல் எரிவாயுவையும் வாங்குகிறோம் (LPG).

இண்டேன், பாரத் என்று பல பெயர்களில் நமக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், நமது சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் LPG எரிவாயு பெரும்பாலும் நமக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டே வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பயன்படுத்தும் எரிவாயுவில் சுமார் 80 முதல் 90 விழுக்காடு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்தே நாம் இறக்குமதி செய்கிறோம். உலகிலேயே சீனாவுக்கு அடுத்து அதிக அளவு எரிவாயு இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியா.
இந்தியாவில் நாளொன்றுக்கு 60 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் (LPG Cylinders) விநியோகமாகின்றன. இந்த சமையல் எரிவாயுவை சுமார் 33 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

நாளொன்றுக்கு இந்தியா முழுதும் 30 கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. 40 கோடி லிட்டர் டீசல் விற்பனையாகிறது.
இத்தனை கோடி லிட்டர் எரிபொருள், மற்றும் எரிவாயு ஆகியவை 140 கோடி மக்களின் அன்றாட வாழ்க்கை, நகர்வு ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவை.
இவற்றைத் தங்கு தடையின்றித் தரவேண்டிய பெரும் கடமை இந்திய அரசுக்கு உள்ளது.
ஈரானில் போர் மேகங்கள் சூழ்ந்த நிலையிலும்கூட இந்தியாவுக்கு வழங்கப்படும் எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றுக்கு எந்தவிதத் தட்டுப்படும் ஏற்படாத வண்ணம் ஈரான் உள்ளிட்ட நாடுகளே உத்தரவாதம் அளித்து தங்கு தடையின்றி அவை கிடைக்க அனுமதித்திருக்கின்றன. ரஷ்யாவும் இந்தியாவுக்கு வழங்கி வரும் எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றைத் தங்கு தடையின்றித் தர சம்மதித்து விட்டது.
அமெரிக்காவும் ஒரு மாத காலம் என்று கூறி இதற்கு சம்மதித்தித்துள்ளது. இத்தகைய நிலையில் சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்திய அரசு சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி ப்ரொபேன் மற்றும் புட்டேன் உள்ளிட்ட எரிவாயு உற்பத்தி செய்யத் தேவையான பொருட்களை அல்கலைன் உள்ளிட்ட பிற பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடாது என்றும், சமையல் எரிவாயு தயாரிப்பு எந்தவிதக் காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணனை, சமையல் எரிவாயு, வாகன எரிவாயு உள்ளிட்ட அனைத்துமே 90 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்படும் நிலையில் சமையலுக்குத் தேவையான எரிவாயு தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறது இந்திய அரசு.
இது இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் நிலையும் கூட. அதேவேளை, உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பதால் கூடுதல் கவனத்துடன் அரசு செயல்பட வேண்டியுள்ளது.

