-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம் குழுமம்
ஈரானின் பழைய வரலாறு, அதன் பெர்சியத் தொன்மை ஆகியவை அந்நாட்டின் தனித்துவத்தை உணர்த்தினாலும் உலகக் காலனி ஆதிக்கம் முடிந்த காலகட்டத்துக்குப் பிறகு குறிப்பாக இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பிறகு இன்றுவரை அந்நாட்டின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியவை எந்தவித
முன்னேற்றமும் அடையவேயில்லை. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காத நாடாகவே ஈரான் இருந்து வருகிறது.
மனித உரிமைகள் மதிக்கப்படாத நாடாகவும், பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு தரும் நாடாகவும் ஈரான் இருந்து வருவதுதான் அந்நாட்டுக்குப் பெரும் பின்னடைவு.
ஈரான் மீதான இன்றைய இஸ்ரேல் – அமெரிக்கப் போர் என்பது எப்படி சட்டவிரோதமாக சில பிரிட்டன் நாடாளுமன்றவாதிகளால் பார்க்கப்படுகிறதோ, அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சிலரால் பார்க்கப்பட்டுகிறதோ அதேபோல ஈரானின் உள்நாட்டு சட்ட திட்டங்களும் அவை நடைமுறைப்படுத்தப்படும் விதமும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களை மதிக்காததாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒரு காட்டுமிராண்டித் தனமான ஆட்சியாகவே பல நிகழ்வுகளில் அந்நாட்டு ஆட்சி இருந்து வந்திருக்கிறது.
உலக மனித உரிமைத் தன்னார்வ அமைப்பு அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் 2024-25 ம் ஆண்டு அறிக்கையின் படி, “ஈரானில் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியாக மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக பெண்கள், இளம்பெண்கள், LGBTI மக்கள், இன மற்றும் மதச் சிறுபான்மை மக்கள் கடுமையான பாகுபாட்டுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.
மனித உரிமை குறித்துப் பேசும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவது, கொடும் விசாரணைக்கு ஆட்படுத்தப்படுவது, துன்புறுத்தப்படுவது, தண்டிக்கப்படுவது ஆகியவை நடைபெறுகின்றன. நீதி விசாரணைகளும் சரிவர நடத்தப்படுவதில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்படுவது, கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவது மிக இயல்பான நடவடிக்கைகளாக ஈரானுக்குள் நடைபெறுகின்றன.
கசையடி, உறுப்புத் துண்டித்தல் உள்ளிட்ட கொடூரமான தண்டனைகள், மனிதாபிமானமற்ற துன்புறுத்தல் ஆகியவையும் நடைபெறுகின்றன. சிறுபான்மை மற்றும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் கடுமையான கொடூரமான தண்டனைக்கு ஆளாகிறார்கள். கடந்த 1988 ம் ஆண்டு சிறைச்சாலை கூட்டுத்தண்டனை பன்னாட்டு சட்ட விதிகளுக்கு முரணானது.
ஊடகங்கள் முடக்கப்படுவது, சமூக ஊடகங்கள் முடக்கப்படுவது, அரசியல் கட்சிகளுக்குத் தடை, தன்னார்வ மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்குத் தடை, தொழிற்சங்கங்களுக்குத் தடை, அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்த அமைதிப் பேரணிக்குக் கூட அனுமதி மறுப்பது என்பது ஈரானின் இறுக்கமான மனித சுதந்திரத்திற்கு விரோதமான நடைமுறைகளாக உள்ளன.
ஈரான் தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருவது, ஆயுதங்கள், பயிற்சி ஆகியவை அளித்துவருவதையும்” அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் அமைப்பு தமது அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், பன்னாட்டு மனித உரிமைப் பார்வையளார்களை ஈரான் அனுமதிப்பதும் இல்லை.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஈரான் எதிர்க்கப்படுவதற்கும், அந்த எதிர்ப்புக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிப்பதற்கும் இந்தக் காரணங்களே முக்கியக் காரணங்களாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், தமது “ஹிஜாப்” கடந்து தலைமுடி வளர்த்ததாக மாஷா ஆமினி எனும் 22 வயது இளம்பெண் ஈரான் ஒழுக்கவிதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தது உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருந்தது.

