மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே !
மின்சாரத்தின் தேவை குறித்து பிறருக்குத் தெரிகிறதோ இல்லையோ உங்களின் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு, தொண்டர்களுக்குத் தெரியும்.
அலைபேசியிலேயே அரசியல் மாற்றம் கொண்டு வந்த உங்களின் ஒரு கோடியே 75 லட்சம் வாக்காளர்களுக்கு நன்கு தெரியும்.
உணவு, குடிநீர், உடை, இருப்பிடம் போல மின்சாரத்தை அத்தியாவசியத் தேவை ஆக்கிவிட்டது இந்தப் புதிய உலகம்.
இதனைத் தங்கு தடையின்றித் தர வேண்டியதுதான் ஒரு மக்களால் தேர்தெடுக்கபப்ட்ட அரசாங்கத்தின் கடமை.
தங்களின் ஆட்சி வந்ததற்குப் பிறகு மிக மிக அதிகரித்துள்ள மின்வெட்டு குறித்த மக்களின் புலம்பல் தங்களின் காதுகளுக்குக் கேட்காமல் போனதற்குக் காரணம் “ரீல்ஸ்” போடக் கூட அலைபேசிகளுக்கு மின்சாரம் இல்லாத நிலையாகக் கூட இருக்கலாம்.
இந்தப் பதிவு போடும்போதே இரண்டு முறை மின்வெட்டு நடந்துவிட்டது.
ஒவ்வொரு நாளும் அதிபட்சமாக 15 முறை மின்வெட்டு ஆகிறது.
Work From Home எனும் அடிப்படையில் லட்சக் கணக்கானோர் வீடுகளிலிருந்து கணினி – இணையதளம் மூலம் பணியாற்றுகிறார்கள், உங்களுக்கு வாக்களித்த “ஐடி துறைப்” பணியாளர்கள்.
அவர்களுக்கும் இந்த மின்வெட்டு பெருத்த பாதிப்புதான்.
சிறு, குறு தொழிற்சாலைகள், விசைத்தறிகள், வேளாண்மை உள்ளிட்ட மின்சாரத்தை சார்ந்திருக்கும் அத்தனை துறைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம் இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் அளவுக்கு அழைத்துக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில்கள் நகைச்சுவையாக இருக்கின்றன.
“சார்…நீங்க எங்கிருந்து பேசுறீங்க ?
சந்தைப்பேட்டைக்கு எதிர்ல இருந்து பேசுறோம்.
அப்படியா…அங்க இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லையே…ட்ரிப் ஆகலை, பியூஸ் போகலை. ஒருவேளை உங்க வீட்டுல ஏதும் பியூஸ் போயிருக்குமோ ” என்கிறார்.
சார்…எங்க ஊர்லயே காலைல இருந்து இந்த நிலைமைதான் என்று நாம் பொறுமையாகச் சொல்ல …
இல்லையே சார்…காலைல இருந்து கரண்ட் ட்ரிப் ஆகலை, பியூஸ் போகலை…என்கிற அதே வாழைப்பழக் கதையை கூறி காதில் பூ சுற்றுகிறார்கள் உங்கள் மின்வாரிய அதிகாரிகள்.
மற்றொரு முறை அழைத்து “சார் காலைல இருந்து 15 தடவை மின்சாரம் போய் வருகிறது” என்கிறோம். அதற்கு அவர் “சார் வாய்ப்பே இல்ல. இங்க எங்களோட டேட்டா படி அப்படி மின்சாரம் போகலை. ஒருவேளை உங்க வீட்டுல அலலது உங்க ட்ரான்ஸபார்மர்ல அப்படி ஆகி இருக்கலாம்” என்று மறுபடியும் மக்களை, வாடிக்கையாளர்களை பைத்தியமாக்குகிறார்கள் உங்கள் மின்வாரிய அதிகாரிகள், முதலமைச்சர் அவர்களே.
உங்க வீட்டுக்கு நிச்சயம் மின்வெட்டு இருக்காது. அதனால் உங்களுக்கு இந்தப் பிரச்னை தெரிய வாய்ப்பில்லை.
உங்க அமைச்சர்கள் பியூஸ் கட்டையை யாரோ பிடுங்குகிறார்கள் என்று 8 கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு கதையை அளந்து கொண்டிருக்கிறார்கள்.
தூய ஆட்சி தாருங்கள் வரவேற்கிறோம். அதற்காக இருண்ட ஆட்சியைக் கொடுத்தால் என்ன செய்வது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே…!
200 யூனிட் மின்சாரக் கட்டணம் இல்லைதான்…ஆனால் மின்சாரம் வேண்டுமே !
ரீல்ஸ் போட்டாவது இதையெல்லாம் சொல்லலாம் என்றால் அதற்கும் மின்சாரம் இல்லையே முதலமைச்சரே !
–மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ்நாட்டு வாக்களரில் ஒருவன்

