இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிப்பயணத்தின்போது தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தி புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்த்திரையுலகின் தன்னிகரில்லாத கலைஞன் பாரதிராஜா. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின்மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டிருந்தவர்.
தமிழ்த்தேசிய விடுதலை பெறுவதற்கான 30 ஆண்டுகாலப் போராட்டம் நடத்திய மேதகு தலைவருக்கு பாரதிராஜா மீது அளவுகடந்த பாசம் உண்டு.
பாரதிராஜாவை நேரில் இலங்கைக்கு வரவழைத்து சுமார் 10 நாட்கள் தமிழ்த் தேசிய நாட்டில் விருந்தினராக அமர்த்தி மகிழ்ந்தார் தமிழ்த் தேசியத் தலைவர். தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்த ஒரு திரைப்படத்தை இயக்கித்தருமாறும் பாரதிராஜாவிடம் மேதகு கேட்டுக்கொண்டதாக பாரதிராஜவே தமது ஊடக நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் ஏறிடாத பாரதிராஜா நாம் தமிழர் கட்சி மேடையில் ஏறி சிறப்புரை ஆற்றினார். நாம் தமிழரின் ஒழுக்கம், வீரம் ஆகியவற்றைப் பாராட்டிப் பேசினார்.
இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புத் தாக்குதல், மனித உரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வந்த பாரதிராஜா தமக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ பட்டத்தை நிராகரித்தார்.
இலங்கையில் தமிழர் இனவழிப்பைக் கண்டித்து நடைபெற்ற பெரும்போராட்டங்களில் பங்கேற்றார் பாரதிராஜா.
கடந்த 2009 ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இனவழிப்புக்கு எதிரான திரையுலகினர் பங்கேற்ற மாபெரும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் பாரதிராஜா முதன்மையானவர்.
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ்த் தேசிய உலகிலும் பாரதிராஜாவின் பங்கு மகத்தானது.
அன்னாரைப் போற்றும் வகையில் நாம் தமிழர் சார்பில் பாரதிராஜாவுக்குச் செலுத்திய கொடி மரியாதை மிகவும் பொருத்தமானது மட்டுமல்ல தமிழ்த் தேசியர்களின் பெருங்கடமையும்கூட. அதனை நிறைவேற்றிய சீமான் அவர்களுக்குத் தமிழ்த் தேசிய உலகம் நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள்.

