தமிழ்த்தேசியம் காக்க வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழுவில் தீர்மானம்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 40 ஆண்டுகாலம் தேர்தலைப் புறக்கணிப்பதும், தேர்தல் அரசியலில் பங்கேற்பதுமான நிலைப்பாட்டில் இருந்துவந்தது. இந்நிலையில், முதன் முறையாக வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமழ்த்தேசியப் பேரியக்கத்தின் சிறப்புப் பொதுகுழுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,
“ஒரு சமூகத்திற்கு அதன் இனம், மொழி, வரலாறு, சமூக ஒழுங்கு ஆகியவற்றை சமகாலத்தில் பாதுகாக்கக்கூடியது அரசியல் ! ஆனால், அந்த அரசியல் தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது. இலட்சியம், நேர்மை, ஒழுக்கம் எவையும் அரசியலுக்குத் தேவையில்லை என்ற நிலை இருக்கிறது.
இவை மட்டுமின்றி, தமிழினத்தின் அடையாளத்தை, தமிழ் மொழியின் வளர்ச்சியை சீர்குலைக்கக் கூடிய வகையில், இந்தியன் – இந்தியத்தேசியம் என்ற வடவர் ஆதிக்க அரசியலும், திராவிட இனம் என்ற அண்டை அயல் இனத்தார் ஆதிக்க அரசியலும் தமிழர்களை தங்கள் இனத்திற்கே எதிரானவர்களாக மாற்றிச் சிதைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி நம்முடைய தமிழினம், தமிழர் தாயகம், தமிழர் வரலாறு, தமிழீழத் தமிழர் வீரம் – ஈகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி, செந்தமிழன் சீமான் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் இல்லை என்ற நிலையிலும், இந்திய அரசுக்குக் கீழ்பட்ட ஒன்றாக இருக்கிறது என்ற நிலையிலும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்து வந்தது.
தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழினத்தின் இறையாண்மை மீட்பு என்ற அடிப்படை இலட்சியத்திற்கு மக்கள் எழுச்சிப் போராட்டங்களே இறுதித் தீர்வாக முடியும் என்பதில், இப்போதும் மாற்றமில்லை! தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்தக் கட்சியோடும் தேர்தல் கூட்டணி வைப்பதில்லை என்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.
அதேவேளை, இறையாண்மை மீட்பு இலட்சியம் நிறைவேறும் வரை வாக்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையில், வாக்களிப்பில் பங்கேற்பது என தீர்மானிக்கிறது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், ஆரியத்துவ இந்தியத் தேசியத்திற்கும், திராவிடத்துவத் திரிபுகளுக்கும் எதிராக தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதென முடிவு செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் வைக்கிறது !
இவ்வாறு தீர்மான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

