தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பத்திரிகை ஊடகவியலாளர் நாச்சி. செல்வராஜ் அவர்களை தமிழ் ஊடகம் செய்திகள் யூடியூப் ஊடகத்திற்காக நேர்காணல் செய்தோம். அதன் சாராம்சம்.
கேள்வி: (வளர்மெய்யறிவான்)
1949-ல் தொடங்கப்பட்டு, 1967-ல் ஆட்சியைப் பிடித்து, ஒரு பெரும் வரலாற்றைக் கொண்ட திமுக, இந்த 2026 தேர்தலில் ஏன் இவ்வளவு குளறுபடிகளைச் சந்திக்கிறது? குறிப்பாக விசிக, இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளை திமுக நடத்தும் விதம் பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில் (திரு. நாச்சி செல்வராஜ்):
திமுக இப்போது ‘ஒன் மேன் ஆர்மி’ (One Man Army) என்ற ரீதியில்தான் இயங்குகிறது. கூட்டணி அமைப்பது முதல் தொகுதிப் பங்கீடு வரை எல்லாமே ஒரு ‘தகிடுதத்தம்’ வேலையாகவே இருக்கிறது. குறிப்பாக, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் மேடையில் ஒரு கூட்டணிக் கட்சி மாவட்டச் செயலாளரை (விசிக) “நீ எனக்கு இணையானவனா? கீழே இறங்கு” என்று பேசியது, அந்தப் பாரம்பரிய கட்சியின் மேட்டிமைத்தனத்தைக் காட்டுகிறது. இது வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் முதல்வருக்கு எதிராக எழுந்த கோஷங்களும் தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கேள்வி:
கலைஞர் கருணாநிதி காலத்தில் கூட்டணிக் கட்சிகள் இப்படி நடத்தப்பட்டதுண்டா? இப்போது சமூக நீதி என்பது திமுகவில் எந்த நிலையில் இருக்கிறது?
பதில்:
கலைஞர் காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன பிரச்சினை வரும் என்று அவருக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால் இப்போது ‘விடியல் அரசு’ என்று சொல்லிக்கொண்டு சமூக நீதியைச் சாகடித்துவிட்டார்கள். ஒரு சமூகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மற்ற சமூகங்களைப் புறக்கணிப்பது ‘சமூகக் கால்வியாதி’ (யானைக்கால் வியாதி போன்ற நிலை) போல இருக்கிறது. திருமாவளவன் போன்றவர்களுக்கு நுண் அரசியல் தெரியும், அதனால்தான் அவர் ஆட்சி அதிகாரம் பற்றிப் பேசுகிறார். திமுக மெஜாரிட்டி வந்தால் ஆட்சி அமைக்க முடியாது என அவரே சொல்வதில் ஒரு புரிதல் இருக்கிறது.
கேள்வி: திமுக, பாஜகவின் கொள்கைகளை மறைமுகமாகச் செயல்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறதே? உதாரணமாகப் பரந்தூர் விமான நிலையம், அதானி துறைமுகம் போன்ற திட்டங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்:
ஆர்எஸ்எஸ்-ன் அஜெண்டாக்கள் இப்போது மறைமுகமாகச் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ்-ன் 50% பாடத்திட்ட முறைகள் உள்ளே வந்துவிட்டன. பொம்மை முதல்வர் என்று விமர்சிக்கப்படும் நிலையில், அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, அவர்கள் விரும்பும் அதானி போன்றவர்களின் திட்டங்களுக்குத் தரைவிரிப்பு கொடுக்கிறார்கள்.
கேள்வி:
ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களுக்கு திமுகவில் சீட் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி உங்கள் கருத்து?
பதில்:
இதுதான் பெரிய அதிர்ச்சி. ஆர்எஸ்எஸ்-ல் வளர்ந்தேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் ஒருவருக்குத் திமுக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. கலைஞர் இருந்தால் இதைக் கண்டுபிடித்திருப்பார். இப்போது ஆர்எஸ்எஸ் காரர்கள் திமுகவுக்குள் ஊடுருவிவிட்டார்கள். அரசாங்கத்தின் பல துறைகளை அவர்களே வழிநடத்துகிறார்கள். இது திமுக ஆட்சியா அல்லது ஆர்எஸ்எஸ் ஆட்சியா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது.
முழு நேர்காணலை Tamil Oodagam Seidhigal (தமிழ் ஊடகம் செய்திகள்) Youtube ஊடகத்தில் பார்க்கலாம்.
தொடர்புக்கு : [email protected], [email protected]

