ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சார் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சம்பவம் திங்கட் கிழமை நடைபெற்றது.
தனது இறந்த சகோதரியின் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் தருமாறு ஒரு பழங்குடி அண்ணன் வங்கியை அணுகியுள்ளார்.
இறப்புக்கான சான்று கேட்டுள்ளனர் வாங்கி அதிகாரிகள். சகோதரி இறந்துவிட்டார் என்று பலமுறை எடுத்துக்கூறியும் சான்றில்லாமல் பணம் தரமுடியாது என்று வங்கி தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டதால் வேறு வழியின்றி புதைக்கப்பட்ட தமது சகோதரி எலும்புக் கூட்டோடு வங்கிக்கு வந்தார் அந்தப் பழங்குடி மனிதர்.
படானா வட்டாரத்தில் உள்ள மலிபோசி கிளை ஒடிசா கிராமீன் வங்கியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசும், நிர்வாக அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டனர்.
50 வயதான ஜீது முண்டா என்ற நபர், 2026 ஜனவரி 26ஆம் தேதி இறந்த தனது அக்கா கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் இருந்த ₹20,000 பணத்தைப் பெற முயன்று வந்துள்ளார். “வங்கி அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பவரை நேரில் கொண்டு வர வேண்டும் என்று கூறியபோது அவர் இறந்துவிட்டார் என்று பலமுறை சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால் கோபத்தில் கல்லறையை தோண்டி எலும்புக்கூட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்,” என்று ஜீது முண்டா செய்தியாளர்களிடம் கூறினார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். படானா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு கூறுகையில், “வங்கி நடைமுறைகள் குறித்து அறிவின்மை மற்றும் அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல் வழங்காததே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்றார்.
மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜீது முண்டாவுக்கு சட்டபூர்வ வாரிசு அல்லது நியமனதாரர் (nominee) குறித்த புரிதல் இல்லாததாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
உள்ளூர் மண்டல வளர்ச்சி அதிகாரி மனாஸ் டண்ட்பட், இதுவரை அவர் அரசு நிர்வாகத்தை அணுகவில்லை என்று கூறியதுடன், எனினும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
வங்கி தரப்பினரின் தகவலின்படி, கல்ரா முண்டாவின் கணக்கில் இருந்த நியமனதாரரும் ஏற்கனவே இறந்துவிட்டதால், ஜீது முண்டா ஒரே உரிமையாளராக உள்ளார். இதனால், அவர் எந்தத் தாமதமும் இல்லாமல் பணத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

