01. சீமான் மக்களைத் திட்டிட்டார் அதனால் தோத்துப்போச்சு
02. திரள் நிதி வாங்கிட்டாங்க அதனால தோத்துப்போச்சு
03. சாட்டை துரைமுருகன் விஜய் குறித்து பேசியிருக்கக் கூடாது
04. பெரியாரை சீமான் பேசியிருக்க கூடாது அதனால் தோத்துப்போச்சு
05. பிராமண கடப்பாரைன்னு சொல்லிருக்கக் கூடாது அதனால தோத்துப்போச்சு
06. ஈ*ழத் தமிழர் நல்லதுக்கு ஒண்ணுமே செய்யலை அதனால தோத்துப்போச்சு
07. காளியம்மாளை வெளியேற்றி இருக்க கூடாது அதனால தோத்துப்போச்சு
08. சீமானும், நாம் தமிழரும் பேசுறது தமிழ்த் தேசியமே இல்ல
09. இடும்பாவனம் அப்படி பேசியிருக்கக் கூடாது
10. கார்த்திகா அப்படிப் பேசியிருக்கக் கூடாது
இப்படிக் கூடாது கூடாது என்கிற வழக்கமான குறைகளைத் தவிர ஆக்கப்பூர்வமான ஒரு தகவலும் சமூக ஊடகங்களில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை.
இதில் என்ன கொடுமை என்றால்….நாம் தமிழர் கட்சி 9 விழுக்காடு வாக்குகள் பெற்று சீமான் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும்கூட இவற்றில் எந்தக் “கூடாது”களும் எங்குமே எழுதப்பட்டிருக்காது.
14 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் பேசி 1 விழுக்காட்டில் தொடங்கி 8.2 விழுக்காடு வரை பெற்ற நாம் தமிழர் கட்சி மேலே குறிப்பிட்ட இந்த காரணங்களாலா 2026 ல் தோல்வி அடைந்தது ?
சிறுபிள்ளைத்தனமான காரணங்களாக இல்லை ?!
சீமான் கடந்த 15 ஆண்டுகளாக பேசிவருவதைத்தான் 2026 லும் பேசினார். இன்னும் சொல்லப்போனால் கடந்த காலங்களை விட அதிகம் பக்குவமாகவே பேசினார்.
சீமான் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சுப் பயிற்சியாளரும் கூட.
பொதுக்கூட்டமாகட்டும், கல்வி நிலையங்களாகட்டும், திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளாகட்டும், பாரதி பற்றிய உரை ஆகட்டும் அரங்கத்திற்கும் பார்வையாளர்களுக்கும் பொருந்தினார்ப் போல மிகச்சிறப்பாக உரையாற்றக் கூடியவர்.
சுமார் ஆயிரம் பேச்சாளர்களை உருவாக்கியவர்.
அப்படிப்பட்டவரின் பேச்சா வாக்குகளை பெறவிடாமல் தடுத்தது ?
எவ்வளவு மூடத்தனமான வாதம் ?!
சாட்டை துரைமுருகன் விஜய் குறித்துப் பேசிய காணொலிகளால் மட்டுமா இந்தத் தேர்தலில் நாம் தமிழர் தோல்வியைத் தழுவியது ?
அப்படியென்றால் விஜய் குறித்து சாட்டை பேசாமல் இருந்திருந்தால் நாம் தமிழரில் 20 விழுக்காடு வாக்குகளும் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருப்பார்களா என்ன ?
ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள் அதுபோல ஆனானப்பட்ட திமுகவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே தோல்வியைச் சந்தித்து இருக்கிறார். திமுகவின் ஜாம்பவான்கள் எல்லாம் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும்போது திமுக 74 தொகுதிகளை தவெக வசம் இழந்திருக்கிறது.
சரி…திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலை இருந்தது… அதிமுகவுக்கு ?!
அதிமுகவுக்கு அப்படி ஒன்றும் மக்கள் மத்தியில் எதிர்ப்பலை இல்லையே ? அது ஏன் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகளை இந்தத் தேர்தலில் இழந்தது ?
ஒட்டுமொத்தச் சென்னையும் எப்படி அதிமுக, திமுக வசமிருந்து பறிபோனது ?!
விஜய் குறித்து திமுகவினர் செய்யாத விமர்சனங்களையா சாட்டை செய்துவிட்டார் ? அதிமுக கட்சியினர் செய்யாததையா சாட்டை செய்துவிட்டார் ?
விஜய் மு.க.ஸ்டாலின் குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார், எடப்பாடி குறித்தும் விமர்சனம் செய்தார். நாம் தமிழர் குறித்தோ, சீமான் குறித்தோ எந்த இடத்திலும் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை.
பிறகு சாட்டை பேசியதால் மட்டும் எப்படி வாக்குகள் நாம் தமிழருக்குப் பறிபோயிருக்கும். என்னவிதமான வாதம் இது ?!
இந்தத் தேர்தலில், திமுகவை அகற்றவேண்டும் என்கிற மக்களின் எண்ணங்களுக்கு விஜய் ஒரு வடிகால், அவ்வளவே.
ஒரு புதிய முகம், திரை முகம், திரைக்கவர்ச்சி, குழந்தைகள், மகன், மகள், பேரன், பேத்தி, பெண்கள் ஆகியோரின் அழுத்தங்களும் சேர்ந்துகொள்ள திமு திமுவென வாக்குகள் விழுந்துவிட்டன.
எனினும் இதில் பெரும்பான்மை கிடைக்காமல் போயிற்று என்பது மற்றுமொரு திருப்பம்.
சுமார் 12 தொகுதிகளில் 2000 க்கும் குறைவான வாக்குகளால் தவெக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. திருக்கோயிலூர் தொகுதியில் வெறும் 285 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது விஜயின் தவெக.
மொத்தத்தில் தவெக 126 தொகுதிகளில் தோற்றுப்போயிருக்கிறது
ஆக, வெற்றிகளும், தோல்விகளும் கலந்த தேர்தல் இது.
மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பிலும் பெரும் ஐயம் இருக்கிறது.
எல்லாவற்றையும்விட சீமானும் நாம் தமிழரும் தோற்றத்தில் பெரு மகிழ்ச்சி கொள்கிறார்கள் சிங்கள பவுத்த பேரினவாதிகள். சீமானுக்கு எதிரே நிற்பது மிகப்பெரிய வல்லமை படைத்த எதிரி. இதுகுறித்துத் தனியே கட்டுரை வெளிவர இருக்கிறது.
நாம் தமிழருக்கு எதிராகவோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவோ வெறுப்பினால் கிடைத்த தோல்வி அல்ல இந்த இரு கட்சிகளுக்குமான தோல்விகள்.
ஆனால் திமுகவுக்கு எதிரான அலை விஜய்க்கு சாதகமாகிவிட்டது.
அவ்வளவே !
எல்லாவற்றையும் தாண்டி நாம் தமிழர் சுமார் 20 லட்சம் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டின் நான்காவது பெரிய கட்சியாகவே நிற்கிறது.
எனவே…சீமான் தோல்வி, நாம் தமிழர் தோல்வி குறித்து வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளி விட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
எல்லாவற்றையும் தாண்டி தனிப்பட்ட முறையில் சீமான் மீது வெறுப்பும், வன்மமும் இருந்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. உளறிக்கொண்டே திரிய வேண்டியதுதான். அதற்கு எந்த மதிப்பும் இருக்காது.

