-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
சமூக ஊடகங்களில் குறிப்பாக முக நூல், யூடியூப் ஊடகங்களில் மேதகு தலைவர் படம் இந்த நொடிவரை இட முடியாது.
கடந்த 2009 ம் ஆண்டிலிருந்து முகநூலில் இயங்கிக்கொண்டிருக்கும் எமக்கு மேதகு படம், கருத்துக்களை பகிராமல் இருந்திருந்தால் முகநூல் வருவாய் மாதம்தோறும் கணிசமான அளவு வந்திருக்கும். ஆனால் . கடந்த 16 ஆண்டுகளாக பலபத்து முறைகள் எமது முகநூல் வருவாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது, Profile சிக்கலுக்கு முகநூல் நிறுவனத்தால் குறியிடப்பட்டிருக்கிறது. அதாவது, வருவாய் ஈட்டும் வாய்ப்பே இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது, காரணம் மேதகுவின் படம் இட்டதால்.
இதுதான் சமூக ஊடகங்களின் நிலை. முகநூலில் வரிந்து கட்டிக்கொண்டு சீமானுக்கு எதிராக ரைட்-அப் எழுதித் தள்ளும் இந்த இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து காற்றில் கம்பு சுழற்றும் “அறிவு ஜீவிகள், எட்டாவது அறிவுக்குச் சொந்தக்காரர்கள், புர்ச்சிப் போராளிகள்” எவரும் இதுவரை மேதகு படத்திற்கு முகநூலில் உள்ள தடையை நீக்கக் கோரி ஒரு பதிவு கூட இட்டதில்லை.
சீமான் குறித்து பக்கம் பக்கமாக முக்கி முக்கி எக்கி எக்கி எழுதுவதுபோல ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை.
வழக்குத் தொடுக்க வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் அதற்கு உடல் வியர்க்கலாம், மேலும் செலவாகும், எதற்கு வம்பு ? சீமானை வசைபாடி எழுதித் தள்ளி விட்டால் தங்களது தமிழ்த் தேசியக் கடமை முடிந்துவிடும். பிற்காலத்தில் தமக்கு கல்வெட்டு வைப்பார்கள், வீர வணக்கம் வைப்பார்கள், போதாதா ?!
அதனால்தான், ஐயோ சீமான் அப்படி செய்கிறார், இப்படி செய்கிறார், தமிழ்த் தேசியத்தை இப்படி செய்கிறார் அப்படி செய்கிறார் என்று ரைட் அப் குப்பைகளை எழுதி எழுதித் தள்ளுகிறார்கள், வெட்கமே இல்லாமல்.
சீமான் மற்றும் நாம் தமிழர் அரசியல் இயக்கத்தில் நிறை குறை இருந்தால் சுட்டிக்காட்டலாம் அதில் தவறு இல்லை. ஆனால், இப்படி அவதூறு எழுதுவோர் அனைவரும் ஒரு “நூலில்” இணைகிறார்கள்.
அந்த நூல் , “மேதகு தலைவர், புலிக்கொடி, தமிழ்த் தேசியம் மூன்றையும் சீமான்
கைவிடவேண்டும்” என்பது….
தமிழ்நாட்டில் மே 17 திருமுருகன் காந்தி தொடங்கி முகநூல் சமூக ஊடகங்களில் கம்பு சுழற்றும் புர்ச்சி போராளிகள் கடந்து இலங்கை நாடாளுமன்றத்தின் பைத்தியக்கார உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் வரை ஒரே குரலில் ஒலிக்கிறார்கள்.
இவர்கள் பெயருக்கு மட்டுமே தமிழ்த் தேசியம் என்று கூவக்கூடியவர்கள்.
தமிழ்த் தேசியம் என்பது ஒரு தொடர் பயணம். ஒரு நாளில், ஒரு பத்து ஆண்டுகளில், ஒரு நூற்றாண்ண்டில் கூட முழுமை பெற்றுவிடும் என்று கூற முடியாது. தமிழர் இன விடுதலைக்கான போராட்டத்தைத் தலைமுறை கடந்து தலைமுறைக்குக் கடத்திச் சென்று தொடர் போராட்டமாகப் போராடி வாழவேண்டிய ஒரு தவம் அது.
இப்படி இருக்க, முகநூலில், சமூக ஊடகங்களில் பயன்படுத்த முடியாத மேதகு தலைவரின் படத்தை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்து, புலிக்கொடி தமிழர் கொடி என்று நினைவூட்டி தமிழ்த் தேசியம் எனும் தமிழர்க்கான் அரசியலைத் தமிழருக்கே சொல்லித் தந்து கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் சீமானை நச்சுக் குளவிகள் போல கொட்டிக்கொண்டிருக்கும் இவர்களிடம் கேட்டுப்பாருங்கள்…”சரி சீமான் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ” என்று….
உடனே பதில் வரும், “மேதகு தலைவர், புலிக்கொடி, தமிழ்த் தேசியம் மூன்றையும் சீமான் கைவிடவேண்டும், தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு சீமானுக்குப் புலம் பெயர் தமிழர்கள் நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும்” என்று.
இது உண்மையில் இவர்களது பிரச்னை, நோக்கம், இலக்கு அல்ல. இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் – இலக்கு – பிரச்சனை. இவர்கள் வெறும் “வாய்கள்” மட்டுமே, குரல் சிங்கள பவுத்த பேரினவாதத்தின் குரல்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் சிங்கள பவுத்த பேரினவாதத்தின் கைக்கூலிகளாகவே இருக்கிறார்கள். தமிழர் இனத் துரோகிகளாக இருக்கின்றனர்.
சரிங்க யார்தான் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது என்று இந்த புர்ச்சிப் போராளிகளிடம் கேட்டுப்பாருங்கள், ” அது தோழர்…யாராவது வருவார்கள் தோழர். நல்ல தலைமை உருவாக வேண்டும் தோழர், ஆனால் சீமான் ஆகாது தோழர்” என்று உருட்டுவார்கள்.
சரி….நீங்களாவது முன்னெடுப்பீர்களா என்று கேட்டால்….”தோழர் அதுக்கு நிறைய நிதி வேண்டும் தோழர், நமக்கு யாரும் தர மாட்டார்கள். அப்புறம் பாருங்க தோழர் இப்போ இருப்பது போல தமிழ்த் தேசியம் குறித்து சமூக ஊடகத்தில் பத்து வரி எதையாவது வாந்தி எடுத்திவிட்டு குப்புறப் படுத்துக்கொள்ள முடியாது தோழர்…உழைக்க வேண்டும் தோழர். அது நமக்கு சரிப்படாது” என்பார்கள்.
சரி…நீங்க ஏதாவது நாம் தமிழர்க்கு நீதி கொடுத்து இருக்கிறீர்களா ? என்று கேட்டால் “நான் எதுக்குங்க தோழர் கொடுக்கனும் ?” என்பார்கள்.
ஒரு சிலர்…”ஆமாம் நான் எத்தனை முறை பத்து பத்து ரூபாய் போட்டிருக்கிறேன், தெரியுமா…சும்மாவா ?” என்பார்கள்.
இன்னும் சிலர்…”ஆட்சி அதிகாரத்துக்கே வராத அவங்களுக்கு ஏன் நான் நிதி தரவேண்டும் ? ” என்பார்கள்.
இவர்கள்தான், ஐயோ சீமானுக்குத் திரள் நிதி வருகிறது, ஐயோ சீமான் அப்படி பேசிவிட்டார், அவருக்குத் தமிழ்த் தேசியமும் தெரியாது, கட்சி நடத்தவும் தெரியாது” என்று புரட்டு உருட்டு உருட்டித் திரியும் மடை மாற்றிகள்.
இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கே ஆத்திரம் வரும்..இந்த ஓநாய்களை பார்த்துக் கெட்ட சொற்களால் அர்ச்சனை செய்யத் தோன்றும், ஆனால் இவர்கள் இப்படித்தான்.
“வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி” எனும் பாரதியின் வரிகளுக்குப் பொருத்தமானவர்கள்.
சீமானைக் குறை கூறி தங்கள் அரிப்பை சொரிந்துகொள்ளும் இவர்கள் ஏன் தாங்களாக ஒரு கட்சி தொடங்கி நடத்தி இவர்கள் கூறுவதுபோல உண்மையான, நேர்மையான, சத்தியமான தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து எடுத்துக்காட்டாக, முன்னுதாரணமாக இருக்கக் கூடாது ?! ஊர் ஊராக, தெருத்தெருவாகச் சென்று தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தக் கூடாது ?! மேதகு படம், புலிக்கொடி இல்லாமல், திரள் நிதி (நன்கொடை ) வாங்காமல் தமிழ்த் தேசியத்தை வெல்லக்கூடாது ?!
செய்து காட்டுங்களேன், எதுக்கு மல்லாந்து படுத்து உங்கள் முகத்தில் நீங்களே காரித் துப்பிக் கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாகித் திரிகிறீர்கள். வாந்தி எடுத்து அலைகிறீர்கள் ?!

