இந்திய அரசின் “மேலாளர்” ஆளுநர் இருக்கும் வரை யார் ஆட்சிக்கு வந்தும் எந்தப் பலனும் இல்லை !
-தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்
TNTV தமிழ் ஊடகம் குழுமத்தின் தலைமை ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்துக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் நேர்காணல் அளித்துள்ளார். அவரது நேர்காணல் காணொளிகளை TNTV Tamil Oodagam Youtube வலையொளித் தளத்தில் காணலாம்.
அவரது நேர்காணலின் சாராம்சம் இதோ,
“இந்தியாவின் அங்கமாக உள்ள மாநிலங்களில் இந்திய அரசின் மேலாளராக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் எந்த மாநிலமும் “முழுமையான சுயாட்சி” பெறுவது கடினம்.
காரணம், நீங்கள் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடத்தி, 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் ஒரு முதன்மை அமைச்சரைத் தேர்ந்தெடுத்து, சட்டமன்றத்தில் மாநிலத்திற்காக எந்த ஒரு சட்டத்தை நீங்கள் இயற்ற எண்ணினாலும். உங்களால் சட்ட மசோதா மட்டுமே நிறைவேற்ற முடியுமே தவிர அது உண்மையில் சட்டமாக ஆகவேண்டுமானால் அதற்கு ஆளுநரின் ஒப்புதல், கையெழுத்து வேண்டும்.
ஆக, நீங்கள் 234 உறுப்பினர்கள் எத்தனை சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தாலும் அவர் கையெழுத்துப் போடவில்லை என்றால் அது ஒருபோதும் சட்டமாகாது.
பிறகு எங்கே மாநில சுயாட்சி இருக்கிறது ?
இந்த முறை மாறவேண்டுமானால் இந்திய நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஆனால் ஹிந்தி பேசும் 6 – 7 மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரமாட்டார்கள்.
உத்திரபிரதேசத்தில் மட்டும் 24 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இப்படி வட மாநிலங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்களை இந்திய அரசு கைகளில் வைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இவர்களே அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வெறும் 39 இடங்களை வைத்துக்கொண்டு என்ன மாற்றம் கொண்டு வரமுடியும் ?!
தமிழர்கள் வெறும் எட்டுக் கோடிப் பேர்தான் தமிழ்நாட்டில் உள்ளோம். ஹிந்திக்கு ஆதரவாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே 24 கோடிப்பேர்கள் உள்ளனர்.
எனவே, இங்கே மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆளுநர் எனும் இந்திய அரசின் மேலாளரின் ஒப்புதலின்றி ஆட்சி நடத்துவது கடினம்.
எனினும், அத்தகைய வரம்புக்கு உட்பட்ட மாநில ஆட்சியிலும் தமிழர் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் இலக்கே தவிர, அந்த ஆட்சி அதிகாரம் மட்டுமே தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தராது.
மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக மட்டுமே தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளை பெற்றெடுக்க முடியும்”.
இவ்வாறு பெ. மணியரசன் கூறியுள்ளார்.
-தமிழ் ஊடகம் ; தனித்துவமான ஊடகம், 6/6/26

