குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கியதற்கான முகாந்திரம் இருக்கிறது. எனவே அகழாய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றுக்கு தமிழ் ஊடகம், தமிழியல் நடுவம் மற்றும் கணபதி தமிழ்ச் சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த மார்ச் மாதம் 29 ம் தேதி கோயமுத்தூர் ஓட்டல் வின்டேஜ் கேசில் அரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கருத்தரங்கத்தில், இந்தியத் தொல்லியல் துறையில் (ASI) பணியாற்றி ஓய்வுபெற்ற முதன்மை அதிகாரி திருமதி. மூர்த்தீஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சம்.
1. தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் நிலை:
“எங்களை (தமிழர்களை) தமிழ்நாட்டில் அதிக நாள் வேலை செய்ய விட்டதில்லை. நாங்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுவோம். அங்கிருந்து கொண்டுதான் தரவுகளைப் பகிர்ந்து கொள்வோம். தமிழகத்தின் சில செய்திகளைத் திரித்துச் சொல்கிற பொழுது, நாங்கள் அவர்களோடு சண்டை போடுவோம்.”
2. குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சி:
“பிபிசியில் சொல்கிறார்கள், ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் பேசுகிறார்கள். ஆனால் அப்படி ஒன்று இருந்ததா என்று கேட்டால் ‘இல்லை’ என்றே முடிக்கிறார்கள். இங்க மனிதர்களே இருக்கவில்லை, பிறகுதான் தமிழகத்தில் மனித இனம் தோன்றியது என்கிற மாதிரியான கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் நமது மௌனம்.”
3. கீழடி மற்றும் பிற அகழ்வாய்வுகள்:
“கீழடிக்கு வந்த பிறகுதான் தொல்லியல் என்ற ஒரு துறை இருப்பதையே மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் அதற்கு முன்பே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு நடந்துவிட்டது. பொருந்தல், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்த பொருட்கள் கிமு 600 ஆண்டுகள் பழமையானவை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிவகலை இரும்பு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.”
4. நீதிமன்றத் தீர்ப்பும் அடுத்தகட்ட நடவடிக்கையும்:
“இப்போது ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பு நமக்கு உயிர் கொடுத்திருக்கிறது. நீதிமன்றம் குமரிக்கண்டம் இருப்பதற்கான ‘Prima facie’ ஆதாரங்கள் இருப்பதாக ஒத்துக் கொண்டுள்ளது. அதனால்தான் அகழ்வாய்வு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். இது கடலுக்கடியில் செய்ய வேண்டிய ஆராய்ச்சி, இதற்கு மத்திய – மாநில அரசுகள் கைகோர்க்க வேண்டும்.”
5. பொதுமக்களுக்கான வேண்டுகோள்:
“அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்று நாம் விட்டுவிடக் கூடாது. ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்று கண்காணிக்க வேண்டும். நம்முடைய சங்க இலக்கியங்களைத் தேடுங்கள், பாறை ஓவியங்களைப் பாருங்கள். மண்ணுக்கு மேலே தெரிவது வரலாறு, மண்ணுக்கு கீழே இருப்பது தொல்லியல். நாம் இப்போது நம்முடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அபாயக் கட்டத்தில் இருக்கிறோம்.”
இந்த உரையின் முழுக்காணொலியையும் TNTV Tamil Oodagam Youtube ஊடகத்தில் காணுங்கள்.
மின்னஞ்சல் : [email protected], [email protected]

