ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை போர் தொடங்கி சுமார் 36 நாட்களாகின்றன.
ஈரானில் அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சியில் மக்கள் கடும் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அங்கு ஆட்சி மாற்றம் செய்யவே தாங்கள் இந்தப் போரில் ஈடுபடுகிறோம் என்று முதலில் கூறியது அமெரிக்கா. அதன் காரணமாகவே ஈரான் அதி உயர் தலைவர் அயத்துல்லா காமனேயியை தாங்கள் அழித்ததாகவும், இதைப் பயன்படுத்தி ஈரான் மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கலாம் என்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
ஆனால், ஈரானில் அரசுக்கு எதிராக ட்ரம்ப் கூறியது போல அப்படி எந்த எதிர்ப்பும் எழவில்லை. மாறாக, காமேனேயி இறப்புக்கு பெருத்த வருத்தமும், கண்டனமும் எழுந்தன.
அடுத்து, ஈரான் அண்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதால் அந்நாட்டின் மீது போர் தொடுத்ததாக ட்ரம்ப் கூறினார். ஆனால், தாங்கள் வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே தாக்குவதாக ஈரான் கொடுத்த விளக்கத்தை பெரும்பாலான வளைகுடா நாடுகளே ஏற்றுக்கொண்டுவிட்டன.
இதற்கிடையில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பெருத்த பொருளாதார சேதங்கள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்க மக்களில் பெரும்பாலான மக்கள் இந்தப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
“நோ கிங்ஸ்” எனும் பெயரில் அமெரிக்க நகரங்கள் முழுதும் பெரும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன.
தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படையணி மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தளம் மற்றும் இஸ்ரேலில் உள்ள இராணுவத் தளங்கள் ஆகியவற்றின் மீது பதில் தாக்குதல் நடத்திய ஈரான், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க – இஸ்ரேல் நாடுகளுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அடைத்துத் தடை விதித்தது.
இதனால் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தச்சென்ற அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவரை அந்த நாட்டுக்குள் சென்று அதிரடியாக மீட்டுள்ளதாக அமெரிக்கா செய்தி வெளியிட்டது.
இது பெரும் பரபரப்பு செய்தியாக அமெரிக்க – இஸ்ரேல் ஆதரவு பத்திரிகை ஊடகங்களில் வெளியானது.
முன்னதாக அமெரிக்காவின் போர் விமானங்களை தாங்களே சுட்டு வீழ்த்தியதாகவும் அதில் தப்பிய ஒரு வீரரை மீட்டுவிட்டதாகவும், மீதமிருந்த வீரரை மீட்கவே இந்த அதிரடி ஆப்பரேஷன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இரண்டு நாட்கள் மலைப்பாங்கான இடத்தில் அமெரிக்க வீரர் மறைந்து இருந்ததாகவும் அவரைத் துல்லியமாக மீட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
ஆனால், இது குறித்து ஈரான் வெளியிட்ட தகவல் அதிர்ச்சி ரகமாக உள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த ஈரான் மக்கள் தொடர்பு அதிகாரி இஸ்மாயில் பாக்கேயி.
“அமெரிக்கா வீரர் மறைந்திருந்தாகக் கூறப்பட்ட இடத்திற்கும் அவரை மீட்க தரையிறக்கம் நடந்த இடத்திற்கும் வெகு தொலைவு வேறுபாடு உள்ளதாகக் கூறியுள்ளார். இது யுரேனியம் திருடுவதற்கான முயற்சியை மடை மாற்றவே நடத்தப்பட்ட நாடகமாக இருக்கலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 3 ம் தேதியன்று ஈரானின் தென்மேற்கே பறந்த அமெரிக்காவின் F15E இரகப் போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் அந்தக் குழுவில் பயணம் செய்த ஆயுத முறைகளின் அதிகாரியைக் (Weapon Systems Officer) காணவில்லை என்றும் இரண்டு நாட்கள் மறைந்திருந்த அவரை மீட்கவே இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
ஆனால், இந்த “மீட்பு நடவடிக்கை” என்று அழைக்கப்பட்ட நடவடிக்கையில் அமெரிக்காவின் இரண்டு போர் வானூர்திகள் , படையணியினரை அழைத்துச் சென்று இறங்கிவிடும் இரண்டு சிறப்பு வானூர்திகள், இரண்டு போர் ஹெலிகாப்டர்கள், ட்ரொன்கள் ஆகியவை ஈரானால் வீழ்த்தப்பட்டுள்ளன.
ஒரு வீரரை மீட்க இத்தனை படையணி தேவையா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில், ஈரான் மக்கள் தொடர்பு அதிகாரி கூறிய தகவலையும் ஒப்பிடும்போது அமெரிக்கா, அது குறிப்பிட்ட 7 ம் தேதி செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக ஈரானின் யுரேனியத்தைக் கைப்பற்றி விட்டால் உலக அரங்கில் ஈரானை எளிதில் வெளிப்படுத்தி விடலாம் என்றும் அதன் மூலம் ஈரானை சரணடைய வைத்து விடலாம் என்றும் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எனினும், அமெரிக்காவின் இந்த முயற்சி படு தோல்வி அடைந்ததால்தான் அசகாய சாதனையாக ஒரு வீரர் மீட்கப்பட்டதை அமெரிக்கா கொண்டாடி நடந்தவற்றை மறைக்கிறதோ என்கிற கேள்வியையும் வல்லுநர்கள் ஐயமாக எழுப்புகின்றனர்.
அதேவேளையில் இதுகுறித்து ஈரானும் மேற்கொண்டு விரிவாக வெளிப்படையாக எதுவும் கூறாத நிலையில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கக் கோரிய அமெரிக்காவின் கெடு 7 ம் தேதி – இன்றுடன் முடிவடைவதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
ஈரானில் 400 கிலோ அளவுக்கு யுரேனியம் உள்ளதாகவும், 200 கிலோ யுரேனியம் அணுகுண்டு தயாரிக்கத் தேவையான நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

