-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
நடிகர் விஜயை வெறும் நடிகராகத் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த போது அவர் குறித்து எவருக்கும் எந்த மதிப்பீட்டுக் குறைபாடுகளும் இருந்தது இல்லை. காரணம் அது யாருக்கும் தேவைப்படவில்லை, அவரது நடிப்பை மட்டுமே பணம் கொடுத்துப் பார்க்கிறோம். அதற்கும் மேல், அவரது தனிப்பட்ட எது குறித்தும் எவருக்கும் எந்தக் கவலையும் இருந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது இல்லை.
திரைப்படம் முடியும் வரை ஒரு கதையின் பாத்திரம் ஏற்று நடித்து பார்வையாளர்களுக்கு எப்படி அந்தக் கதையைச் சொல்கிறார்கள் என்று இரசித்துப் பார்த்து விட்டு வெளியே வந்துவிட வேண்டியதுதான். அவ்வளவுதான் அந்த நடிகருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையேயான உறவு.
ஆனால், தொடர்ந்து அவரது இரசிகராகி, அப்படிப்பட்ட இரசிகர்களை ஒன்றிணைத்து “இரசிகர் மன்றம்” எனும் நிறுவனமாக்கி அவர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்தினால்…அதிலும் எந்த சிக்கலும் இல்லை.
அந்த ஆக்கபூர்வமான பணிகளில் அரசியலும் ஒன்று என்று முடிவெடுத்து சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்த்து எடுத்து, அவர்களுக்கு சமூக அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து நம்பிக்கை மிக்க ஒரு பெருங்கூட்டமாக வலிமையும், திறமையும் மிக்க ஒரு ஆற்றல் வாய்ந்தவர்களாக ஆக்கினால் அதிலும் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், திரையில் தம்மைப் பார்த்து விசிலடித்து, கரவொலி, எழுப்பி, காகிதங்களைக் கிழித்து வீசி, கட்-அவுட்டுக்குப் பால் ஊற்றி, அமர வேண்டிய இருக்கைகளை உடைத்தெறிந்து, கதவு மேல் ஏறுவது, கூரையைப் பிரிப்பது, மரத்தின் மேல் தாவுவது, மின் கம்பத்தின் மீது ஏறுவது, இருசக்கர வாகனத்தில் வந்து தாம் வரும் வாகனத்திலேயே இடித்துக் கீழே விழுவது, சாலை சந்திப்பில் பச்சை விளக்குக்காக நிற்கும் தமது வாகனத்துக்கு மலர் தூவுவது, எந்தக் கூட்டம், எந்த நாடு, எந்த ஆளுமை என்று பார்க்காமல் சுற்றுலாத் தலத்தில்கூட டிவீகே என்று கத்துவது…..என்று எந்தப் பக்குவமும், சமூக அறிவும், அரசியல் அறிவும் இல்லாமல் அப்படியே அந்த இரசிகர் கூட்டத்தை சாலைகளில் கூடவைத்து திரையரங்கு எனும் நான்கு சுவற்றுக்குள் செய்துகொண்டிருந்த அத்தனை அபத்தங்களையும் வெளியே செய்ய வைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் அந்தக் கூட்டம் மட்டுமே தமது ஒரே “சொத்து” என்பதால் அவர்கள் அதேபோல வெறிபிடித்த இரசிகர்களாகவே எப்போதும் நீடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்படும் நடிகர் விஜய் அடிப்படையில் ஒரு அரசியல் தலைவராக மட்டுமல்ல ஒரு நல்ல மனிதராகவே இன்னும் ஆகவில்லை.
இப்படி வெறிபிடித்த – கட்டுப்பாடற்ற தமது இரசிகர்களைப் போல விஜய் தமது மகன், மகளை இருக்க விட்டுவிடுவாரா ? பண்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டிருக்கிறாரா?
விஜயைப் பின்பற்றும் லட்சக்கணக்கான இளையோர்கள் விஜயின் மகன் – மகள் வயதுக்கு ஈடானவர்கள்தானே.
தன் கணவனை விட விஜயைத்தான் பிடிக்கும், கணவனை விட்டுவிட்டு விஜயுடன் வாழ்வேன், விஜய் என்றால் எனக்குப் பைத்தியம் என்று கூறும் சில பெண்களின் காணொலிகள் பல கோடி மக்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறதே…என்றாவது விஜய் ஒரு 50 வயதைக் கடந்த, ஒரு பெண்ணின் கணவன், இரண்டு குழந்தைகளின் தந்தை என்ற ஒரு பொறுப்போடு ஒரு அறிக்கை அல்லது உரை வெளியிட்டு அந்தப் பெண்களுக்கு அறிவுரை கூறியிருப்பாரா ?
சில 10 வயதுப்பெண்கள் முதல் 30 வயதுப்பெண்கள் வரை தன்னை இப்படித் தவறாக எண்ணி இருக்கிறார்களே இது எவ்வளவு பெரிய தவறு ? இப்படிப்பட்ட இரசிகர்களையா நான் வளர்த்து விட்டிருக்கிறேன் ? என்று என்றாவது விஜய் வெட்கப்பட்டது உண்டா ? சிறு குற்ற உணர்ச்சிக்கு ஆளானது உண்டான ?
மாறாக அதை இரசிக்கிறாரே விஜய் ?
ஆக, அவருக்கு தம்மைப் பின்பற்றும் இளயோரை ஒரு “சோம்பி” போலவே இப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதானே எண்ணம் ?!
அல்லது சில பெண்களை அப்படி நடிக்க வைத்து அந்தக் காணொலியை பரப்புவதன் மூலம் எல்லாப் பெண்களும் தம்மை அப்படியே கருத வேண்டும் என்று விரும்புகிறாரா விஜய் என்கிற கேள்வியும் எழுகிறது இல்லையா ?
இந்த லட்சணத்தில் தன்னை எம்.ஜி.ஆருக்கு இணையான “புரட்சி தலைவர்” என்று பில்ட் அப் செய்துகொள்ளவேண்டும் என்று நினைப்பது எம்ஜிஆருக்கு செய்யும் அவமானம் இல்லையா ?!
எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு திரைப் படப்பாடல் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலும் ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, கண்ணியத்தைக் கற்றுக்கொடுக்கும் பாடல்களாக அவர் அமைத்திருந்தாரே….
எம்.ஜி.ஆர் பாடல்களில், திரைப்படங்களில் பொய்யும் புரட்டும் விஜய் படங்களில் இருப்பதுபோல இருந்திருக்கவில்லையே…
திருடாதே பாப்பா திருடாதே….என்ற தமது திரைப்படப் பாடல் மூலமாக எம்.ஜி.ஆர் சமூகத்திற்கு அறிவுறுத்தியது போல விஜய் ஒரு பாடலிலாவது அறிவுறுத்தி உள்ளாரா…அல்லது கூட்டங்கள், அறிக்கைகள், உரைகள் வாயிலாவது அறிவுறுத்தி உள்ளாரா ?
தமது திரைப்படத்தின் ஒவ்வொரு வசனம், காட்சி, பாடல்கள் என்று சமூக, அறிவியல், வரலாறு, அரசியல் “கற்றுக்கொடுக்கும்” பாடங்களாகவே எம்.ஜி.ஆர் அமைத்திருந்தாரே.
விஜய் என்றாவது அப்படி சிந்தித்ததாவது உண்டா ? ரவுடி, தெருப்பொறுக்கி, சிறைவாசி, போதை மருந்து கடத்தும் தாதா போல அல்லவா திரைப்படங்கள் வாயிலாக கற்பிதம் செய்கிறார் ?!
ஜனநாயகன் எனும் திரைப்படத்தில் தன்னை எம்.ஜி.ஆர் போல அவரது இரசிகர்களும், மக்களும் கருதும் வகையில் கதை, திரைக்கதை, வசனத்தை அமைத்து அதற்கு எந்தத் தகுதியும் இல்லாத விஜய் சொல்வது பொய், செய்வது புரட்டு – மோசடி இல்லாமல் வேறு என்ன ?!
உண்மைக்குப் புறம்பான பொய்யான ஒரு பிம்பத்தை மக்களை நம்பவைத்து தேர்தல் அரசியலில் வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் ஆகத் துடிப்பற்காக விஜய் சொல்வது வெறும் பொய்யும், செய்வது வெறும் புரட்டும், மோசடியும், பித்தலாட்டமும்தானே ?!
இரசிகர்களை, மக்களை முட்டாளாக்கி யார் யாருக்கு என்னென்னெ பிடிக்குமோ அதை முன்வைத்து “எலி பிடிக்க வைக்கும் பொறி” போல தமது திரைப்படத்தை வைத்து “பிள்ளை பிடிக்கும்” வேலை செய்வது ஏன் ?
திராவிடம் என்று சொல்லிக்கொள்பவர் வாக்குகளைப் பெற பெரியார் இராமசாமி படம், பட்டியல் பெருங்குடி மக்களின் வாக்குகளைப் பெற அம்பேத்கர் படம், வன்னியர் குடி மக்களின் வாக்குகளைப் பெற அஞ்சலை அம்மாள் படம், தமிழர்களின் வாக்குகளை பெற வேலுநாச்சியார் படம் என்று தொடக்கத்தில் வைத்து தமது நாடகத்தைத் தொடங்கி பிறகு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்று அடுத்தடுத்து ‘கொள்கைத் தலைவர்களை, வழிகாட்டுநர்களை’ நேரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப அதிகரித்துக் கொண்டே நாடகம் நடத்தி வரும் விஜயிடம் என்ன உறுதியான திட்டம், கொள்கை இருக்கிறது ?
இந்துக்கோயிலுக்கு போனால் நெற்றியில் திருநீறு குங்குமம், மசூதிக்குப் போனால் குல்லா, கன்னியாகுமரி பக்கம் போனால் “ஜெப மாலையை” சட்டைக்கு வெளியே போட்டுக்கொள்வது, வெள்ளாளர், பட்டியல் மக்கள், கிறித்தவர் மக்கள் தொகை உள்ள திருச்சி கிழக்கில் போட்டியிடுவது, ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பெரம்பூரில் போட்டியிடுவது என்று…வர்க்கம், சாதி, மத வாக்குகளைக் குறிவைத்து செயல்படுவதுதான் பெரியார் இராமசாமியைக் கொள்கைத் தலைவர் என்று விஜய் தம்ப்பட்டம் அடித்துக்கொள்ளும் லட்சணமா ?!
திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற அனைத்துத் தரப்பு அடையாளங்களையும் பிரதிபலிக்குமாறு சில அம்சங்களை வைத்துப் படத்தை எப்படியாவது ஓட வைத்துவிடவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தை போலவே அரசியல் இயக்கத்திலும் செய்வது எவ்வளவு பெரிய அபத்தம்.
ஆணி வேர், பக்க வேர் எதுவுமே இல்லாத ஒரு ஆயிரம் காலத்து ஆலமரம் போல செயற்கையாக ஒரு மர பொம்மையை வைத்து இதுதான் எங்களது ஆயிரம் கால மரம் என்று மக்களை நம்ப வைப்பது போன்றது அல்லவா இது ?!
எவ்வளவு இழிவான செயல் ?!
விஜய் நேற்றுக் காலை கட்சி அரசியல் தொடங்கவில்லை. தான் விஜய் மக்கள் மன்றம் மூலமாக பல ஆண்டுகள் பொதுமக்கள் சேவை செய்துவருவதாகக் கூறுகிறார். ஆனால், அப்படி எந்த நல்ல அனுபவமும், பக்குவமும் விஜய் மற்றும் அவரது இரசிகர்களிடம் கொஞ்சமும் தெரியவில்லையே.
அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறி விஜய் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர் குறித்த அத்தனை பிம்பங்களையும் அவரையே உடைக்க வைத்துவிட்டது.
எம்.ஜி.ஆர். தமது அரசியலுக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு அதை திரையிலும், தரையிலும் செய்து மக்களை அணுகினார், மக்களோடு மக்களாகக் கலந்து நின்றார்.
விஜய் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் தெருவில் இறங்கி விளையாடும் சிறுவர் போல வலம் வந்துவிட்டு அப்போதும் தமது இரசிகர்கள் பூ தூவுவது, தர்பூசணி, குளிர்பானங்களை வீசுவது, சைக்கிள் ஓட்டுவது என “தன் பெருமை”யை ஊருக்கு சொல்வது என்று வெட்டி விளம்பரம் செய்து விளையாடிக் கொண்டு திரிகிறாரே…
இதுவா எம்.ஜி.ஆர் ஆன லட்சணம் ?!
உண்மையில் எம்.ஜி.ஆர் சிறந்த நடிகர், சிறந்த சண்டைப் பயிற்சி பெற்றவர், கதை, பாடல்கள் தேர்ந்தெடுப்பதில் சிறந்தவர், திரைப்படத்திற்கான இந்தியாவின் முதல் தேசிய விருதைப் பெற்றவர். ரிக்சாக்காரன் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே முதல் தேசிய விருதைப் பெற்றவர் எம்.ஜி.ஆர்.
விஜயின் “நடிப்புக்கு” அதிகபட்சமாக விஜய் டிவி விருதுகள் மட்டுமே கிடைத்தன. இதிலிருந்து தெரிய வருவது என்னெவென்றால் விஜயின் திரைப்படங்கள் தேசிய விருதுக்கான எந்தத் தகுதியுமற்றவை என்பது உறுதியாகிறது.
இவரா எம்.ஜி.ஆர் போல “சிறந்த” நடிகர் ?
எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்கக் கூடத் தகுதியற்ற நடிகர்தானே விஜய் ?!
இந்தியா -சீன போர் காலத்தில் நாட்டுக்காக அதிக நிதி கொடுத்த முதல் இந்தியர் எம்.ஜி.ஆர்.
இலங்கையில் சம உரிமை கேட்டுப்போராடிய இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி அந்தக் காலத்திலேயே பல கோடி ரூபாய்கள்.
விஜய் ஈழத் தமிழர் போருக்குக் கொடுத்த நிதி வெறும் 500 ரூபாய்.
இந்த விஜயா எம்.ஜி.ஆர் ?!
அதுமட்டுமல்ல உலக அளவில் ஒரு திரைப்பட நடிகர் ஒரு நாட்டின் (மாநிலத்தின்) ஆட்சி அதிகாரத்தை முதன் முதலாகப் பெற்றது எம்.ஜி.ஆர்தான். அமெரிக்காவில் திரைநடிகர் ரீகன் இவருக்குப் பிறகுதான் ஆட்சிக்கு வந்தார்.
ஐ.நா சபையால் பாராட்டப்பெற்ற ஒரே முதல் இந்திய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
இந்தியாவிலேயே சாரணர் உயரிய விருது “வெள்ளை யானை விருது” அளிக்கப்பட்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
போட்டியிட்டு தேர்தல் களத்திற்கே வராமல் வெற்றி பெற்ற ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
அரசு தனக்கு செய்த மருத்துவ செலவுக்கான தொகையை அரசுக்குத் திருப்பி அளித்த ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
விஜய்…வாங்கிய வெளிநாட்டுக் காருக்கு உரிய வரி செலுத்தாமல், தரப்பட்ட ஊதியத்துக்குக் வரிகட்டாமல் அரசை ஏய்த்தவர் அல்லவா ?
பெரும்பணம் படைத்த “முதலாளிகளை” தேர்தலில் நிறுத்த வைக்கும் விஜயா உழைக்கும் மக்களின் தலைவர் ? ஏழைப் பங்காளர் ?!
மேலும், இந்தியாவில் தரப்படும் பத்மஸ்ரீ, பாரத் ரத்னா உள்ளிட்ட விருதுகள், பட்டங்களைப் பெற்ற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான்.
எல்லாவற்றையும் விட எம்.ஜி.ஆர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மட்டுமே. ஆனால், அவரது இறப்புக்கு டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்திற்கு இறக்கப்பட்டது. அன்று இந்திய அளவில் அரசு விடுமுறை விடப்பட்டது. இது இந்திய வரலாற்றில் எம்.ஜி.ஆர் ஒருவருக்கு மட்டுமே அளிக்கப்பட்ட சிறப்பு.
இந்தியாவின் இராசாங்க மரபுப்படி முப்படைத் தளபதிகள் ஒரே இடத்தில் சந்தித்துக் கொள்வது என்பது கிடையாது. அனால், எம்ஜிஆரின் மறைவின்போது இந்த மரபுகளை உடைத்து இந்தியக் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், முப்படைத் தளபதிகள் வந்து மரியாதை செலுத்தியது இந்திய வரலாறில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே.
எம்.ஜி.ஆர் மீது பெண்கள் கொண்டிருந்தது மரியாதை. ஆனால் விஜய் தன் மீது பெண்கள் கொண்டிருப்பது போல பொய்யாகக் கட்டமைப்பது பெண்கள் தன் மீது பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்ற அவலமான பிம்பம்.
தமது இரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் ஒழுக்கம் கற்றுக்கொடுத்தார். தமது திரைப்படங்களில் எதிலும் எம்.ஜி.ஆர் புகை பிடிப்பது போல, பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதுபோல, இரத்தம் சொட்ட சொட்ட வெட்டி வீழ்த்துவது போன்ற சைக்கோத்தனமான எதையும் காட்சிப்படுத்தியதில்லை.
ஆனால் விஜய் தமது திரைப்படங்களை வைத்து இரசிகர் கூட்டம் எனும் பெயரில் உளவியல் சிக்கல்களைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கிவைத்துவிட்டு அந்தக் குழந்தைகளைக் கொண்டு வாக்குகள் பெற்று முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று செயல்படுவது எவ்வளவு ஆபத்தானது ?!
விஜய் முதலில் தாம் பொறுப்புடன் நடந்து தமது இரசிகர்களுக்கும் கற்றுக்கொடுத்து பக்குவம் பெற்று அதன் பிறகு அரசியலுக்கு வரட்டும்.
ஆனால் தன்னை எம்.ஜி.ஆர் போல என்று கூறிக்கொள்வதற்கு விஜய்க்கு எப்போதும் எந்தத் தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை.
விஜய் தமிழ்நாட்டை ஆளும் அளவுக்கு அறிவோ, அனுபவமோ, பக்குவமோ, நேர்மையோ அற்றவர் !
கட்டுரையாளர் : தமிழ் ஊடகம் குழுமத்தின் ஆசிரியர்.
(எம்.ஜி.ஆர் குறித்த அரிய தகவல்கள் : நன்றி – கல்கி இதழ்)

